Thursday, August 28, 2014

நீலம் -வடிவம்

ஜெ,

மீண்டும் சொல்கிறேன். இது நீங்கள் எழுதுவதே அல்ல. இருளை ஒளியின் பெருங்கனவு என்கிறீர்கள். என்ன அர்த்தம் அதற்கு? உங்களாலேயே சொல்லிவிடமுடியாது. ஆனால் மொத்த அத்தியாயமும் பொருளில்லாத நிலையில் அதைச் சொல்லிக்கொண்டிருக்கிறது.  இருளாகி அனைத்தும் சுழன்றழியும் இன்மையின் இருளே அவனா?

இத்தனை பித்து நிலையில் எழுதினாலும் உங்கள் அடிமனசு ஆரம்பத்திலேயே மொத்த  கட்டிடத்தையும் கண்டு விடுகிறது.கன்னங்கருமைக்குள் எஞ்சும் வண்ணம்தான் ஏது? என்ற வரியில் தொடங்கும் அத்தியாயம் சீராக வந்து கண்ணறியா கருமை யை கனசியாமன் என்று அறியும் இடத்தில் முடிகிறது.

ஆச்சரியம்தான். இந்த ஒரு அத்தியாயத்தை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது இன்று பகல் முழுக்க வாசித்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொரு வரியாக எடுத்து ஒரு டைரியிலே எழுதி அர்த்தமும் எழுதிக்கொண்டே இருந்தேன். முப்பது நாப்பது பக்கங்களுக்கு அர்த்தம் எழுதிவிட்டேன்.

தேடுகையில் ஆடுபவன் அவன்   மாதிரி நேரடியான தத்துவம்

அவனுக்கு இப்புவியே வேண்டும். விண்வேண்டும் வெளிவேண்டும். எஞ்சாமல் எங்குமிருக்கவேண்டும். காலமாகி காலம் கடந்தும் திகழவேண்டும்?

அதற்கு இவன் ஆயர்குடிச் சிறுவனாக ஏன் வந்தான்? பரம்பொருளாகப் போய் நின்றிருக்கவேண்டியதுதானே?”

போன்ற கவித்துவமான பகடி.

என்ன சொல்ல? வாழ்க

சுவாமி


அன்புள்ள சுவாமி,

அப்படி ஒரு திட்டம் அத்தியாயங்களுக்கு இல்லை. ஓரு வரியை மீளமீளச் சொல்லி தொடங்குவேன். ஓர் இடத்தில் இதோ  முடிந்துவிட்டது என்று தோன்றும். நீங்கள் சொல்வதுபோல பின்னர் வாசிக்கையில் ஓர் வடிவ ஒழுங்கு அமைந்து வந்திருப்பதை காண்கிறேன். அது கையிலா கருத்திலா இருக்கிறது என்று தெரியவில்லை

ஜெ