Thursday, August 28, 2014

கண்ணனின் குளியல்

குழந்தையை தொட்டு அணைத்து நுகர்ந்து முத்தத்தில் சுவைகொண்டு அதன் விளையாடல், புன்னகையை கண்டு, மழலைமொழி கேட்டு நாம் ஐம்புலன்களால் அடையும் இன்பம் இறைவன் நம்முடைய இந்த மனித பிறவிக்கு கொடுத்துள்ள வரம்.  பேருந்தில் பக்கத்து சீட்டில் இருப்பவரின் மடியில் தவழும் குழந்தையின் கால்கள் என்னை தீண்டுமோ என ஏக்கத்துடன் காத்திருந்த காலம் உண்டு. எனக்கென குழந்தைகள்  வந்தபோது நான் அடைந்த அந்த தொடுதல்  இன்பத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். என் குழந்தைகளை அதிகம் நான் தான் குளிப்பாட்டுவேன்.  குழந்தையின் தொடுதல் இன்பத்தை குளிப்பாட்டுவதன் மூலமே அதிகம் அனுபவிக்க முடியும்.  அப்போதெல்லாம் அந்த இன்பத்திற்கு நான் தகுதியானவன் தானா என கண்ணீர் மல்குவேன். பிள்ளகள் வளர்ந்துவிட்டார்கள் இப்போது  அது வெறும் நினைவாகிவிட்டது. அதற்கான ஏக்கம் எப்போதும் என் மனதில் இருக்கிறது. இதற்கப்புரம் ஒருவேளை என் பேரக்குழந்தைகளைன் வழி எனக்கு அந்த இன்பம் கிடைக்கக்கூடும் என இருந்தேன்.  ஆனால் உங்களால் இன்று கண்ணனையே குளிப்பாட்டும் பேறு பெற்றேன்.   இன்னும்  அந்த குளியல் சாந்தின் மணம் போகவில்லை குளிப்பாட்டி எழுந்த அந்த சிறு அயற்சி தீர வில்லை. என் உடைகளில் தெறித்து விழுந்த ஈரம் காயவில்லை. அவனை தொட்ட கைகள் உணர்ந்த மென்மை அப்படியே உள்ளது. ஒரு முழு அனுபவத்தை தந்திருக்கிறீர்கள். கண்ணனை இடுப்பில் அமர்த்தினால் கூட சிறிது இடைவெளி இருக்கும் என நெஞ்சத்தில் வைத்திருக்கிறேன் நான்.

அன்புடன் 
த.துரைவேல்

அன்புள்ள துரைவேல்,

அது ஒரு தருணம்.

அக்கணம் முழுமைகொண்டு மறுகணத்தில் மீண்டும் பிறந்தெழுதல்.

பெரிதில் சிறிதையும் சிறிதில் பெரிதையும் காண்பதே இரண்டையும் அறியும் வழி

ஜெ