Tuesday, October 14, 2014

சகுனியும் ஜெங்கிஸ்கானும்



[சகுனி- simoquin ஓவியம்]


அன்புள்ள ஜெ

மழைப்பாடலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். சகுனியின் கதாபாத்திரத்தைப்பற்றித்தான் யோசித்துக்கொண்டே இருந்தேன். திரும்பத்திரும்ப பேசப்பட்டு ஒரு type ஆக மாறிப்போன கதாபாத்திரத்தை அதிலிருந்து மீட்பது சாதாரணமான காரியம் கிடையாது.சகுனி என்றால் சதிகாரன், வன்மம் கொண்டவன், வஞ்சகன் என்றெல்லாம் தான் நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். நேர்ப்பேச்சிலேகூட அப்படித்தான். சகுனி என்று ஒரு தமிழ் சினிமாகூட வந்தது

இந்நாவலில் அதை உடைத்து அவனை ஒரு மனிதனாகக் காட்டியிருக்கிறீர்கள். ஒரு தூய்மையான சத்ரியன். சத்ரியனுக்கு மண்ணாசை தான் லட்சணம். அது அவனிடமிருக்கிறது. அதில் நேர்மையாகவும் வெளிப்படையாகவும்தான் இருக்கிறான். இதுவரை வந்த சகுனி மிகவும் நேர்த்தியான ஒரு வீரனாகவே இருக்கிறான்

அவனை பாலைவன ஓநாயுடன் சம்பந்தப்படுத்தியிருப்பது அற்புதமானது. பாலைவன ஓநாய் போல பசியை அறிந்த எதுவும் இல்லை. போராடிப்போராடி வாழ்ந்தது அது. ஆகவே அது கடினமானது.unyielding என்று ஆங்கிலத்திலே சொல்வார்களே அந்தக்குணம். அதுதான் சகுனியின் குணம் என்று பார்க்கும்போது அவனுடைய குணச்சித்திரம் மிகமிகத் துல்லியமாக விளங்கி வருகிறது

சகுனிக்கு பாரதவர்சத்தை  வெல்லவேண்டும் என்று ஆசை. அது அவனுடைய ஈகோவாகக் கூட இல்லை. காந்தாரநாடு வெல்லவேண்டும் என்ற ஆசைதான். வரலாற்றிலே பார்த்தால் ஜெங்கிஸ்கான் ஒரு சரியான உதாரணம். பாலைவனத்தில் பிறந்தார். மிகமிகக் கடுமையான சூழலிலே போராடி வளர்ந்தார். அவருடைய மனதுக்குள் உலகை வெல்லவேண்டும் என்ற ஆசை எழுந்தது. பெரும்படையுடன் எழுந்து ஆசியாவையே சூறையாடினார்

ஜெங்கிஸ்கான் ஒரு அரக்கன். உலகை அழித்தவன் ரத்த ஆறு ஓடவிட்டவன். இதெல்லாம் நமக்குத்தெரியும். ஆனால் அவன் உலகம் முழுக்கப்போய் செல்வத்தை கொண்டுவந்து தன் மக்களுக்குக் கொடுத்தவன். மங்கோலியர்களை பலநூற்றாண்டுககாலம் செல்வாக்காக வாழச்செய்தவன்.

அந்த மக்கள் இன்றும் ஜெங்கிஸ்கானை கொண்டாடுகிறார்கள். மங்கோல் என்ற  சினிமா ஜெங்கிஸ்கானை பெரிய ஹீரோவாகக் காட்டுகிறது. முக்கியமான படம்






சகுனி ஒரு ஜெங்கிஸ்கான் என்று புரிந்துகொள்வதுதான் சிறந்தது. வரண்ட பாலைவனத்தில் வாழ்ந்தவனுக்கு வளம் மிக்க கங்கைச்சமவெளியை வென்று பேரரசை அமைக்க ஆசை. காந்தாரத்தை பேரரசாக ஆக்கவேண்டும் என்பதற்குமேல் அவனுக்குத் திட்டமே இல்லை. சுயநலமில்லாத தேசியவீரன்

உண்மைதான், அவன் ஜெயித்திருந்தால் கங்கைசமவெளியை கொள்ளை அடித்திருப்பான். அவனை பாண்டவ்ர்கள் அழித்தது சரி. ஆனால் அவன் கொடியவன் அல்ல. நம்முடைய ஹீரோ அல்ல, வேறு எவருடையவோ ஹீரோ

சரித்திரத்தில் நிறைய ஜெங்கிஸ்கான்கள் இருக்கிறார்கள். தைமூர், , முகமது கஜினி , அகமதுஹா அப்தாலி போன்றவர்களெல்லாம் பாலைவனப் படைஎடுப்பாளர்கள். தங்கள் மக்களுக்கு பெரிய நாயகர்கள். சகுனி அவர்களுக்கெல்லாம் முன்னோடி

சந்தானம்

மழைப்பாடல் பற்றி கேசவமணி பதிவு