Tuesday, November 25, 2014

கண்ணன் வருகை




இனிய ஜெயம்,

மற்றும் ஒரு இனிய அத்யாயம். பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் குந்தியின் அண்மைக்கு ஏங்குகிறார்கள். அதில் தருமன் தனி வகை.

சற்றே பின்னோக்கிப் பார்த்தால், குந்தி கர்ணன் வசம் மட்டுமே அன்னையாக இருந்திருக்கிறாள் என்று தோன்றுகிறது.

கர்ணனுக்கு கிடைக்காத  தாய்ப்பாசம் எதையும் பிற ஐவருக்கும் அளிப்பதில்லை என முடிவு செய்து விட்டாளோ?  அவ்வகையில் இந்த மறுப்பின் வழியே அவள் தன் மகன்கள் அறுவரையும் சமமாக பரிபாளிக்கிறாளோ?

அர்ஜுனனுக்கு பறவைக் கூட்டத்தின் குரல் அளிக்கும் தியான அமைதியும், தருமனுக்கு ஒரே ஒரு பறவையின் குரல் தூண்டி விடும்  மனசாட்சியின் ஓலமும் கிருஷ்ணன் அறியும் அப் பறவை என்ற 'தாயின்' தவிப்பும் கச்சிதமாக அந்த மாந்தன சபையில் முயங்கி, யார் யார் அகத்தே எத்தகு தன்மையுடன் அங்கு உள்ளனர் என தெளிவாகவே முன் வைத்து விடுகிறது.

பாண்டவர் ஐவரும் வெவ்வேறு தருமன் அன்றி வேறல்ல என அர்ஜுனன் நினைக்கிறான். அது கௌரவர்களை 'பிறனாக' வகுக்கும் எல்லையில் துவங்குகிறது எனத் தோன்றுகிறது.
அன்றேல் துரியனை தனது சகோதரனாக தருமன் அகத்தில் உணர்ந்திருந்தானாகில் குந்தியின் அகத்தை கணக்கில் கொண்டு அவளுக்கு மணி மூடி சூடி அழகு பார்த்தது போல, துரியனையும் கணக்கில் கொண்டு அவன் அகம் புண்படா வண்ணம் அரசு சூழ் நிலை உரைத்திருப்பான்.

அந்த 'சிறுமைதானே' இன்று அக் குருவியின் குரலாக தருமனை அமைதி குலைய வைக்கிறது?

கிருஷ்ணனும் அர்ஜுனனும் சந்திக்கவேண்டி  பீமன் கொள்ளும் விழைவு அழகோ அழகு. பீமனின் குருநாதர் முன்னுரைத்தது அல்லவா அது?

கிருஷ்ணனுக்கு பெண்களைத் தெரியும், யோகியர் உள்ளத்தைத் தெரியும், தத்துவத்தின் போதாமை தெரியும், மனிதர்கள் துவங்கி, ஆநிரை  புள்ளினம் என உயிர்க்குலம் மொத்தத்தின் அக மொழியும் புரியும்.

அனைத்துக்கும் மேல் வாதத்தின் கதவடைபிற்கு முன் புன்னகையுடன் தோற்கத் தெரியும்.

புன்னகையுடன் தோல்வியை ஏற்பவனைக் காட்டிலும் 'அகம் ஒழிந்தவன்' வேறு யாரும் உண்டா?

துரியன் கிருஷ்ணன் வசம் குமுறும்போதும், தருமன் குந்தி எத்தகு பதிலுரைப்பாள் என முன் மொழியும்போதும்  கிருஷ்ணன் சொல்கிறான்  ''ஆனதைச் செய்வோம்''

உணர்சிகள் ஏதும் கலவாத லௌகீக விவேகம். ஆகையால்தான் அவனுக்கு குருவி எனும் தாயின் தவிப்பும் புரிகிறது. வாதத்தின் முன் புன்னகையுடன் தோற்கவும் தெரிகிறது.

இத்தகு ஒருவனை குருசேத்திரதில் ஆயுதம் எந்தா வண்ணம் நிறுத்திய 'விதி' எது?

உணர்சிகள் ஆயுதங்கள் கொண்டு தங்களை நிறுவிக்கொள்ள 

விவேகம் சாட்சியாக அமர்ந்திருக்கிறது.

நீலம் நாவலில் ஒரு வரி வருகிறது குரு சேத்திரத்தைப்  பார்த்த விழிகள்.

இனிய ஜெயம், பிறரது பார்வையில் வித விதமான ஆளுமையாக உருவெடுத்து வந்த கிருஷ்ணன், நேர்க்காட்சியில்  நாடிழந்தவனாக தோல்வியின் பாரத்தை சுமந்தவனாக அறிமுகமாவது இனிய முரண் நகை.

ஆக கிருஷ்ணன் வந்தே விட்டான். 

கடலூர் சீனு

கண்ணனின் முதல் காட்சி