Monday, February 23, 2015

வெண்முகில் நகரம்-17-தள்ளி நின்றுப்பார்த்தால்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

இயற்கை வழங்கி இருக்கும் உணவும், செயற்கையாய் மனிதன் உருவாக்கும் உணவும் எத்தனை எத்தனை வகை. வகைக்கு எத்தனை எத்தனையோ சுவை ஆனால் பசி ஒன்றுதான். அதை உண்டாக்கவும் முடியவில்லை நிறுத்தவும் முடியவில்லை.

காமம் என்னும் பசிக்குதான் உலகில் எத்தனை எத்தனை உணவு. கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் உணவாகும் இந்த பசியில்தான் எத்தனை எத்தனை சுவை வேண்டி இருக்கிறது. காதுக்கு சொல்வேண்டும். வாயிக்கு சுவைவேண்டும், உடம்புக்கு உணர்வுவேண்டும், நாசிக்கு சுகந்தம்வேண்டும், கண்ணுக்கு காட்சி வேண்டும். இத்தனை பசிக்கும் உணவிட்டப்பின்பு அதிகமாகும் இந்த பசிதான் கொடூரப்பசி.
இந்த பசி என்னும் படிமத்தை சரியாகக்கண்டவன் சகாதேவன் மட்டும்தான். தருமன் சொல்லை ஆகுதியாக்கி அந்த தீயை வளர்க்கலாம் அல்லது அணைக்கலாம் என்று நினைக்கிறான். பீமன் உடம்பையே உணவாக்கி அதை வளர்க்கலாம் அல்லது அணைக்கலாம் என்று நினைக்கிறான். அர்ஜுனன் வீரத்தை ஆகுதியாக்கி அதை வளர்க்கலாம் அல்லது அணைக்கலாம் என்று  நினைக்கிறான். நகுலன் கொடுப்பதால் எடுப்பதால்,  பணிவதால் எழுவதால்  அதை வளர்க்கலாம் அல்லது அணைக்கலாம் என்று நினைக்கிறான். அவர்கள் அனைவருமே அவர்களுக்கு உரிய இடத்தை தாண்ட மறுக்கிறார்கள்.  அப்படித்தாண்டினால் என்ன ஆகும்? அவர்களின் பயன்பாடுகள் உடைப்பட்டுப்போகும். இணையில்லா அழகு ரோஜாவைக் கண் கண்டாலும் அதன் மணத்தை கண்கள் அறிவதில்லை.  ஐம்பொறிகளில் ஒவ்வொன்றும் அதற்கு உரிய வேலையைத்தான் செய்கிறது. ஒன்றின் வேலையை மற்றொன்று செய்யமுடிவதில்லை. திரௌபதியை மனைவியாக அடைந்த பாண்டவர்களும் ஐம்பொறிப்போல இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் உயர்ந்து உள்ளார்கள். சகாதேவன் மட்டும் மாறுபாடு நிரம்பி உள்ளான்.

முன்னவர்கள் நால்வரும் கணவன் என்ற இடத்தில் இருந்தே திரௌபதியை நோக்க, சகாதேவன் மட்டும் தள்ளி நின்று நோக்குகின்றான். இந்த அற்புதம் அவன் கற்ற சோதிட நூல் தந்ததா? தனக்கு கதை சொல்லவந்த விறலியிடம் தானகா(சகாதேவனாக) இருந்து பாடும்படி அல்லது திரௌபதியாக இருந்து பாடும்படி சொல்கின்றான். அதற்கு விறலி மறுக்கும் தருணங்கள் இரண்டும் விறலி இல்லாமல்போகும் கணம் என்பதை அறிந்து விறலியை விறலியாக இருக்க வைத்து அவள் பிறந்த விசாக நட்சத்திரத்தில் இருந்து கதையை சொல்லச்சொல்லும் இடத்தில் சகாதேவன் விறலியை வானில் தூக்கி வைத்துவிடுகின்றான்.

தூரத்தில் உயரத்தில் இருக்கும் அணைத்தும் மகத்துவம் நிரம்பியவைகள். தூரத்தில் உயரத்தில் இருப்பதாலேயே கீழ்மைகளை மறைத்துக்கொண்டு மகத்துவங்களை வெளியிடும் அற்புதங்கள் அவைகள். சகாதேவன் விறலியை உயரத்தில் வைத்ததுபோலவே திரௌபதியையும் தூரத்தில் உயரத்தில் வைத்துப்பார்க்கின்றான்.
இந்திரன் உயரத்தில் இருப்பவன் அவன் கதைப்படி காமத்தால் கீழ் இறங்கி கீழ் இறங்கி வந்து கீழ்மகனாகின்றான். இந்திரப்பதவி என்பது எத்தனை பெரியது.நூறு அஸ்வமேதயாகம் செய்து அடையக்கூடியது. நூறு அஸ்வமேதயாகம் என்பது அளவுக்கடந்த உழைப்பின் வெளிப்பாடு. அந்த உயர்ந்த பதவியை அடைந்த இந்திரன்போல் இன்னொரு கீழ்மகன் இல்லை என்பது தான் காவியங்கள் காட்டும் உச்சம்.  அக்கினி அருகில் இருப்பவன் செயல்மூலம் தூரத்தில் வைக்கப்படுகின்றான் உயரத்திற்கே செல்கின்றான். ஒவ்வொரு முறையும் வணக்கத்திற்கு உரியவன். இந்திரனை விலக்குவதுபோல் விலக்கமுடியாதவன் அக்கினி. இந்த இடத்தில் அர்ஜுனனை வென்று நிற்கும் சகாதேவன் பாராட்டுக்கு உரியவன். இந்த இடத்தில்  வென்று நிற்கும் சகாதேவன் வென்று நிற்கும் இடத்திலே மகன் என்று காட்டும் வடிவாகி நிற்பவன்.

மனைவியை அன்னை என்று கண்டுகொண்ட கணவன் ஆசிர்வதிக்கப்பட்டவன். பெண் அனைத்தையும் தியாகம் செய்யும் பெரும் வல்லமைக்கொண்டவள் அதனால்தான் பெண்ணுக்கு தவம் தேவை இல்லை என்று உலகம் சொல்கிறதோ?  பெண்ணால் தியாகம் செய்ய முடியாத ஒன்று அவர்களுக்குள் இருக்கும் கன்னி என்னும் தேவியைத்தான் என்று நினைக்கின்றேன்.

பாஞ்சாலியைப்பற்றிச்சொல்லும்போது “ஐவருக்கும் பத்தினி அழியாத கன்னிகை” என்று சொல்வார்கள். அதைக்கண்டுக்கொண்ட சகாதேவன்தான் திரௌபதியின் கணவனும் குழந்தையும்.

சகாதேவன் பாக்கியவான்தான் அதனால்தான் தனக்கான கதையை தானே தேர்ந்து எடுக்கிறான்.
இந்த இடத்தில் முடிக்க நினைக்கும்போது ஒன்ற தோன்றுகின்றது  பாண்டவர்கள் ஒவ்வொருவரும் கேட்கும் கதையை கொண்டு ஒரு ஆராட்சி செய்யலாம். மகாபாரதம் ஏன் எழுதப்படவேண்டும் என்று மீண்டும் காட்டிப்போகின்றீர்கள் ஜெ.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.