Tuesday, March 31, 2015

அபூர்வ உறவு





அன்புள்ள ஜெமோ,

வெண்முகில்நகரத்தில் காந்தாரியும் கிருஷ்ணனும் பேசுமிடத்தில் உருவாகி வரும் ஒரு நுட்பமான விஷயம் என்னைத் திகைக்கச்செய்தது. அது என் வாழ்க்கையின் உண்மையான அனுபவம். யாரும் இதுவரை இலக்கியத்தில் இதை எழுதி நான் வாசித்ததில்லை.

அம்மா இல்லாத காமமே இல்லாத ஒரு பெண்ற்ணுறவு ஆணுக்கு இருக்கலாம். எல்லாருக்குமா என்றால் தெரியவில்லை. சிலருக்கு இருக்கலாம். அப்படிப்பட்ட உறவு வருமென்றால் அது வேறுமாதிரி இருக்கும். தெய்வம் மாதிரி. அல்லது அதுக்கும் மேலே

அந்தமாதிரி உறவு ஏன் வருகிறது என்பது பெரிய கேள்வி / அத்ற்கெல்லாம் பதிலே வாழ்க்கையிலே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு உறவு எனக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே வந்தது. அவர் என்னைவிட ஆறுவயது மூத்தவர். அம்மா இல்லை. தோழி. ஆனால் எந்தவிதமான செக்ஸ் கவர்ச்சியும் இல்லை. தனிப்பட்ட முறையிலே பார்த்தால் அவரது குரல் பிடிக்கும். நான் மெல்லிசைக்குழுக்களில் பாடிவந்தபோது அவரும் பாடினார். அதுதான் தொடர்பு

அந்த உறவு என்னை மேம்படுத்தியது. ஆனால் என் அம்மா மனைவி எவருக்குமே அது புரியவில்லை. அந்தப்பெண்மணிக்கேகூட அது கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது. அந்தப்பெண்ணின் கணவர் புகுந்து பெரிய ரசாபாசமாகியது. அதன்பிறகு நான் குடிக்கத் தொடங்கினேன். பெரிய குடிகாரனாக இருந்து பிறகு மீண்டு வந்தேன். உங்களுக்குத்தெரிந்த டாக்டரிடம்தான் போனேன்

இப்போது என் மகள் வடிவில் அவர்களைப்பார்க்கிறேன் என்று சொல்லலாம். ஆனால் இந்த விஷயத்தை தெளிவாகச் சொல்லியே இருக்கமுடியாது என நினைக்கிறேன்

எஸ்