Friday, April 29, 2016

வியாசபாரதம் எப்போது வந்தது?



 ஜராசந்தன் "எனக்கு தென்கடலென அலைதிகழும் வியாசகாவியமே உகந்தது" என்கிறான்.

வியாசர்  மகாபாரதம் எழுதும்போது வயதில் மிகவும் முதியவர்.  அவர் மகாபாரதம் எழுதுவதற்கு முன் பல காவியங்களை எழுதியிருக்கலாம்.  ஆசான் வெண்முரசு எழுதுவதற்கு முன் விஷ்ணுபுரம் எழுதியிருக்கவில்லையா?  அதுபோல வியாசர் மகாபாரதத்திற்கு முன்பாக எழுதிய ஏதாவது ஒரு பெருங் காவியமாக இருக்கலாம்.

   ஒருவேளை வால்மீகி இராமாயணத்தை முன்னரே எழுதிவைத்துவிட்டார். ஆனால் இராமாயணக் கதை அப்புரம்தான் நடந்தது என்று ஒரு கூற்று உண்டு. இதுவும் அப்படி நிகழ்ந்த ஒன்றாக இருக்கலாம்.

    முதல் காரணம்தான் அதிக பொருத்தமாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

தண்டபாணிதுரைவேல்


அன்புள்ள நண்பர்களுக்கு


வியாசபாரதத்தின்  நிகழ்வுகளினூடாகவே  அக்காவியம் வியாசரால்  இயற்றப்பட்டு அதுவே சூதர்களால் உதிரிப்பாடல்களாக பாரதம் முழுக்கப் பாடவும் படுகிறது என்றே வெண்முரசு சொல்கிறது. நிகழ்வுகளை உடனடியாகவே காவியத்தில் அதன் நாயகர்களே கேட்கவும்செய்கிறார்கள். இது வீரயுக காலகட்டத்தின் வழக்கமும் கூட

போர் முடிந்ததும் அக்காவியம் முடிவு அடைகிறது- இச்செய்தி வெண்முரசில் வந்துகொண்டே இருக்கிறது.ஒவ்வொரு நாயகனுக்கும் அவன் அக்காவியத்தில்தான் வாழ்கிறானா என்னும் திகைப்பும் இருக்கிறது. அதன்பொருட்டுதான் வாழ்கிறானா என்னும் அடிப்படைத்தேடலும் உள்ளது.

வெண்முரசின் meta narration னின்  ஒரு பகுதியாக இந்த விஷயம் வந்தபடியே இருக்கிறது. ஒருவகையில் விஷ்ணுபுரத்திலும் இது உள்ளது
 
ஜெ