Tuesday, July 12, 2016

இந்திரநீலமும் சியமந்தகமும்



ஜெ,

இந்திரநீலம் பற்றி கேசவமணி எழுதியதை வாசித்தேன். இந்திரநீலம் வாசிக்கையில் என்க்கு ஒரு எண்ணம் வந்தது. சியமந்தகம் பற்றி கொஞ்சம் அதிகப்படியாகவே சொல்லப்பட்டிருக்கிரதோ என்று தோன்றியது. ஏனென்ன்றால் இப்படி தொடராக வாசிக்கையில் அடுத்தது என்ன என்ற கேள்வி இருந்தபடியே இருக்கிறது. நாவல்களை தொடராக வாசிப்பதிலுள்ள சிக்கலே இதுதான். அந்த ஆர்வம் பொறுமையின்மையை உருவாக்குகிறது. ஆகவே சிலபகுதிகள் இழுப்பதுபோலத் தோன்றியது

ஆனால் நூலாக வந்ததும் மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் அந்தப்பிரச்சினையே இல்லை. நான் இந்திரநீலம் நாவலை இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். இரண்டுநாட்களில் வாசித்தபோது சீக்கிரமாக முடிந்ததுபோலத் தோன்றியது. சியமந்தகம் என்னும் ஒரு மணியின் வெளிச்சத்தில் அத்தனைபேரையும் பரிசோதித்திருப்பதும் சியமந்தகம் ஒவ்வொருவரையும் ஒவ்ச்வொருவகையிலே ஆட்டிவைப்பதும் பெரிய அனுபவமாக அமைந்தது

வெண்முரசு நாவல்களை ஒரே வாசிப்பாக வாசிக்கையில்தான் உண்மையில் அதன் கட்டுமானமே தெரிகிறது. தொடச்சியாக வாசிக்கையில் ஆரம்பகால அத்தியாயங்கள் மறந்து விடுகின்றன. நினைவிலிருந்து திரட்டித்தான் ஒரு ஒட்டுமொத்த வாசிப்பனுபவத்தை அடையவேண்டியிருக்கிறது

தியாகராஜன்