Monday, July 25, 2016

தக்கார் தகவிலர்







தன் அரசணிக்கோலத்தை முழுவதும் கலைத்து தன்னை தந்தையாக மட்டும் பாசத்தறியில் தன்னை கால்கை பிணைத்து தொழுவத்தில் கட்டிக்கொள்ளும் திருதராஸ்டிரன் படைப்பு அற்புதம் ஜெ. இது இப்படி நடக்குமா? பிள்ளைப்பாசம் அப்படி நடத்தும். எந்த யானையும் தன்னை தட்டிக்கொள்ளும் ஒரு சங்கிலியை சுமந்தே அலைகிறது. திருதராஸ்டிரனுக்கு பிள்ளைகள் என்னும் நூறு சங்கிலி.  

மகன் சாதனை படைத்துவந்தால் என் மகன் என் மகன் என்று பீற்றிக்கொள்ளும் தந்தை, மகன் எதாவது தப்பு தவற்றில் மாட்டிக்கொண்டால் என்மகன் என்பது சட்டென என்ன மகன்? என்று மாறிவிடும். உன் மகன் உன்மகன் என்று மனைவியிடம் மள்ளுக்கு நிற்கும். திருதராஸ்டிரன் விதுரனை இங்கு மனைவியாக பாவித்து உன் மைந்தர் என்று தப்பிக்கிறார்.

மாபெரும் அறவடிவினன் மறவடிவினன் கருணைவடிவினன் களிறு நடையினன் அரிமா குணத்தவன்  என்று மனிதனை தூக்கிவைத்தாலும் மனிதன் இடம் கிடைக்கும்போது தான் எளிய மனிதன் மட்டும் என்று காட்டிக்கொண்டுவிடுகிறான்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும்.-என்கிறார் வள்ளுவர்.  

மனிதன் தனது எச்சத்தால் உலகம்த தன்க்கனை தக்கவன் என்று காணப்படவேண்டும் என்று விரும்புகின்றான். அவனின் எச்சம் அவனை தக்கவனாக ஆக்குகினால் மனதன் தருக்கி எழுகின்றான். ஆனால் அவனின் எச்சம் அவனை தகவிலர் ஆக்கும்போது அஞ்சி பின்னநகர்கின்றான். தப்பிக்க முயல்கின்றான். திருதராஸ்டிரன் பாண்டவர்களுக்கும் பாஞ்சாலிக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கு அஞ்சவில்லை, தனது தக்கார் பதவி நசுங்கியதை கண்டு அஞ்சுகிறான்.

 //அவன் எப்படி அதை செய்யத் துணிந்தான்? அவனை என் மகன் என்று எண்ணித் தருக்கினேனேஅவன் என் மகனே அல்ல. அவன்…” என்று திருதராஷ்டிரர் கூவியதை// நோக்கையில் பரதாபமாகத்தான் இருக்கிறது.

மனிதன் எளியவன் தக்காராக ஆகமுடியாதபோது தகவிலார் ஆகிவிட அவன் துணிந்துவிடவில்லை மாறாக தன்னை “தந்தை“ என்று எவர் முன்னும் கையேந்தி நின்று இரக்க துணிந்துவிடுகிறான்.

மகன் பாண்டவர்களுக்கு வாரணாவத தீவிபத்தை ஏற்படுத்தினான் என்பதை அறிந்து கொதித்து அடங்கி அதற்காகவும் துரியோதனை சாவடி அடித்து துவசம் செய்யும் திருதராஸ்டிரன் இன்று காந்தாரி தீச்சொல் இடும்போது கொதிப்பதைப்பார்க்கும் போது எத்தனை பலகீனமானவன் மனிதன் என்று கேட்கத்தோன்றுகின்றது.

//“இழிமகளே, என்ன சொல்கிறாய்?” என்று கூவிய திருதராஷ்டிரர் கையை ஓங்கியபடி எழுந்தார். “பெற்ற மைந்தருக்கு தீச்சொல்லிடுகிறாயா? அன்னையா நீ?” //

மனிதனுக்கு தக்கார் பதிவி வேண்டாம், ரதகஜதுரகபாததியுடன் ஆளும் அரசபதவிவேண்டாம், தந்தை என்று வாழும் வாழ்க்கை மட்டும் போதும் என்றுதான் மனிதன் நினைக்கிறான். அடியாழத்தில் மகனுக்கு துன்பம் வரும் என்று நினைத்தால் தந்தை இன்னும் இன்னும் பலகீனமாகிவிடுகிறான். திருதராஸ்டிரனுக்கு இந்த பலகீனம்  கூடிகூடிவருவதுதான் துயரத்திலும் துயரம். காரணம் கண்ணில்லாதவன் கண்களுக்கு தெரியும் எதிர்கால உண்மையின் இன்றைய கனவு. 

மைந்தன் என்ற சொல்லுக்கு பலம்சேர்ப்பவன் என்றுபொருள், ஆனால் வாழ்க்கையில் அந்த சொல் பலகீனத்தை தந்தைக்கு கொண்டுவருவது கொடுமை. மைந்தனாக துரியன் திருதாவுக்கு பலகீனத்தையே தருகிறான். அந்த பலகீனத்தின்மூலமாகவே இன்று  தன்னை தந்தையாக மட்டும் திருதா உணர்கிறான்.

மகன்கள் நினைக்கிறார்கள் தந்தை தனது சிறுவயதில் தன்னிடம் அதிக பாசமாக இருந்ததாக. ஆனால் மகன் வளர வளர அல்லவா தந்தை மகனிடம் அதிக பாசமாக இருக்கிறார். மகன்களுக்கு அது புரியுமா? நடக்க தெரியாத வயதில் மகன் எழுந்து விழும்போது களிக்கும் தந்தை மகன் நடந்து ஓடப்பழகியப்பின்பு அல்லவா மகனின் கைப்பிடித்துக்கொண்டு கண்ணுக்கு தெரியாமல் அவன் பின்னால் தவிக்கும் கண்களோடு அலைகிறார்.

திருதராஸ்டிரன் என்னும் ஹஸ்தியின் வழிவந்த ராஜகளிறு இன்று தன்னை தந்தை என்று மட்டும் சொல்லிக்கொள்கிறது.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும்.-என்னும் திருக்குறளை நடுவு நிலைமை அதிகாரத்தில் வைத்தவர் வாழ்க!

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். .