Monday, September 5, 2016

வெண்முகில் நகரம்


நட்டாஷா என்ற பெயரை போரும் வாழ்வும் நாவல் படித்தவர்கள் மறந்து விட முடியாது. மிக நுட்பமாக உருவகிக்கப்படும் கதாப்பாத்திரம் அவள். அறிந்த சிறுமியுடன் இளம்பெண்ணுடன் அன்னையுடன் என ஏதோவொரு வகையில் அவளை ஒப்பிடாமல் வியக்காமல் ஏங்காமல் அந்நாவலை படித்து முடித்து விட முடியாது. அத்தனை அணுக்கமானவள் என்பதாலேயே பெரு வாழ்வென எல்லாப் பக்கங்களிலும் விரிந்து கிடக்கும் அந்நாவலில் நட்டாஷாவின் முடிவுகளும் குழப்பங்களும் வாசிப்பவர்களை பாதிக்கும். ஒரு நாடக அரங்கில் அனடோல் என்ற ஒழுக்கமற்ற பேரழகனிடம் நட்டாஷா மனமிழப்பதை மிக நுண்மையாக நாடகத்தின் காட்சி மாற்றங்களைக் கொண்டே சித்தரித்திருப்பார் டால்ஸ்டாய். பரிதவிக்கச் செய்யும் அத்தியாயம் அது. ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் தவிக்கும். அதே தவிப்பினை பன்மடங்குத் தீவிரத்துடன் வெண்முகில் நகரத்தின் முதல் பத்தொன்பது அத்தியாயங்கள் அளித்தன.