Friday, February 3, 2017

மாயை




ஜெ

இந்த அத்தியாயத்தில் வரும் திரௌபதியின் காட்சி ஆச்சரியமளிக்கிறது. பன்னிரு படைக்களத்தில் வரும் திரௌபதி அல்ல இவள். குடும்பப்பெண் போலிருக்கிறாள். அவளுடைய குரோதமெல்லாம் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இந்தச்சித்திரம் நான் எதிர்பாராதத்து

சாரங்கன்


அன்புள்ள சாரங்கன்

மகாபாரதத்தில் ஒரு ஒழுக்கின்மை உண்டு கதாபாத்திரப் பரிணாமங்களில் உள்ள முரண்பாடுகள் பல. அது பல கதைகள் பலரால் இணைக்கப்பட்டமையால் வருவது.

துகிலுரியும் காட்சி பிற்காலத்தையது. கூந்தல் அவிழ்த்திடுவதும் வஞ்சினம் உரைப்பதும் நாடகத்தனமாக பின்னர் சேர்க்கப்பட்டது. ஆகவே அதன்பின் வரும் மகாபாரதப் பாஞ்சாலியின் கதாபாத்திரம் இயல்பாக இருப்பது முரண்பாடாகத் தோன்றும். அங்கே அவள் எளிய குலமகள்தான்.

ஐந்து சிற்றூர்கள் போதும் அல்லது ஐந்து வீடுகளே போதும் என கௌரவர்களிடம் பேரம்பேசப்போகும் கண்ணன் திரௌபதியிடம் பேசிவிட்டுத்தான் செல்கிறான். அவனுக்கு அவள் போட்ட சபதம் தெரியாதா என்ன?

வெண்முரசு இந்த முரண்பாடுகளை சில புனைவுத்திகள் வழியாகக் கடந்துசெல்கிறது. குரோதமும் வஞ்சமும் கொண்டவள் மாயைதான். திரௌபதி அல்ல

ஜெ