Tuesday, February 7, 2017

எரி முன் நிற்றல்.



மா மங்கலையின்  மற்றொரு தோற்றம் இன்றைய திரௌபதியில் . மங்கலையின் ஒரு முகம் அனைத்தையும் எரித்தழிக்கும் ஊழித் தீ என்றால். இந்த முகம் அன்னம் புரக்கும் அன்னலட்சுமியின் அடுமனைத் தீ.

கந்தமாதான மலையில் இருந்து தர்மன் மீண்டு,புதிய பிறவி எடுத்த கணமே திரௌபதி அவளுள் தகிக்கும் அழலை அவனும் அறிந்து விட்டான் என்பதை உணர்கிறாள். அதுவே அன்று தர்மனை நோக்கிய அவளது புன்னகையில் வெளிப்பட்டது. பிறகென்ன அழியா அனல் அது அங்கேயே அப்படியேதான் இருக்கப்  போகிறது,  நீலன் வித விதமான குண ரூபங்கள் கொண்டு வெளிப்பட்டாலும், ஆழத்தில் அவன் யாரோ அதை இழந்து விடுகிறானா என்ன? திரௌபதி அனைத்து எல்லையியலும்நீலனுக்குஇணையானவளேகுஸ்மிதன்.தனது மனைவியின் கற்பு குறித்து பேசுவதை திரௌபதி கையாளும் நிலையே  அவள் உள்ளே அப்படியேதான் இருக்கிறாள் என சுட்டுகிறது. இன்று அடுமனைத் தீ முன் நின்று அன்னம் பரிபாலிப்பவள்தான், நாளை களமே சிதைத்தீயால் சூழப்பட்ட குருஷேத்ரத்தின் முன்னும் நிற்கப் போகிறவள்.

மேலும் இங்கே மிக முக்கிய ஆளுமை திரௌபதியின் தோழி மாயை.. உண்மையில் அவளுக்கு இந்த துரியன் கர்ணன் எனும் இணையற்ற ஆளுமைகள் முன் நிற்க என்ன தகுதி உண்டு? திரௌபதியின் தோழி என்பதை தவிர்த்து? கர்ணனை திரௌபதி தவிர்க்கவேண்டி மாயை சொல்லும் காரணம் ஒன்றே போதும். எந்த தகுதியும் அற்ற அவள் அங்கிருந்து திரௌபதியாக நடித்துக்கொண்டு இருக்கிறாள்.  பீமனை முதல் கணம் பார்க்கையில், அவள் அந்த தேரில் திரௌபதியுடன் இருக்கிறாள். பீமன் தேரை இழுக்க ,மாயை  உடலின்ப உச்சம் எய்துகிறாள். திரௌபதிக்கு முன்பாகவே, திரௌபதி சுகிப்பதற்கு முன் அர்ஜுனனை சுகித்து, அவள் சுகித்து முடித்த ஒன்றினை திரௌபதிக்கு விட்டு வைக்கிறாள். சபையில் ''திரௌபதி சார்பாக'' சபதம் செய்வதும் அவள்தான். திரௌபதியாக நடித்து அவள் கொண்ட காமம் க்ரோதம் இதன் விளைவே பலவும். அங்கே கணிகர் . இங்கே மாயை. 

 மேலும் வெளியே முடிக்க சாத்தியமா எனும் ஆயாசம் அளிக்கும் பெரும் பணிகள் காத்துக் கிடக்க ,பெண்கள் தங்களை இயல்பாக சிறு வேலைகளுக்குள் [திரைசீலையை ஒழுங்குபடுத்துவது ,அடுமனையை சுத்தப்படுத்துவது போல] மடை மாற்றிக் கொள்ளும் உளவியலின் சித்திரம் பல வெண் முரசுக்கு உள்ளேயே வருகிறது.  ஆக திரௌபதியின் இன்றைய தோற்றத்தில் ஆச்சர்யம் கொள்ள ஒன்றும் இல்லை .

தர்மன்தான் பாவம். திரௌபதியை முதன் முதலாக தனிமையில் சந்திக்கும்போது என்ன பேசினானோ [அடிப்படை நூல் ஒன்று குறித்து விவாதிப்பார்] அங்கேயே நிற்கிறான். அவனிடம் அவன் பேசுவதில் இருந்து எதை என்ன எப்படி வினவ  வேண்டும் என [இத்தனை வருட குடித்தனத்தில்] அவனிடம் முதலில் பேசிய அரைமணி நேரத்திலேயே கண்டடைந்து இருப்பாள்.  அவ்வளவுதான் தர்மனின் எல்லை.

நகுல சகாதேவர்களோ அவளுக்கு குழந்தை போல .  அர்ஜுனனோ வானவில் போல. எப்போதேனும் பல நிகழ்தகவுகளின் விளைவால் மட்டுமே அவள் முன் தோன்றுபவன் . மிஞ்சி இருப்பவன் பீமன் மட்டுமே.  காற்றும் நெருப்பும் ஊடுமா என்ன?
சொல்புதிது சீனு