Saturday, August 12, 2017

'எழுபுரவி






அன்புள்ள ஜெ

வெண்முரசில் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு அமைப்பு இருந்தாலும் 'எழுபுரவி'யின் segue போன்ற தொடரமைப்பு சட்டென்று கவர்ந்தது.

முதலில் நகர் பற்றிய வர்ணனை, அந்த சமூகம் மீது அழுத்தமாக அமர்ந்து கொண்டிருக்கும் வரலாறும் செயலின்மையும். அதன்பின் ஒரு உரையாடல், அதில் வெளிப்படும் அவர்களின் அறவுணர்ச்சி. அது குவியம் கொள்ளும் ரிதுபர்ணனின் அகம். கரிய பெரும்புரவியான காரகன் உத்தரனின் அகம் என்றால் ஸ்வேதை ரிதுபர்ணனின் அகவடிவம்.

ரிதுபர்ணன் அலைபாயும் வெண்புரவிமேல் எடையுடன் அமர்ந்திருக்கிறான். பாலையில் சுபத்திரையுடன் குதிரையில் விரையும் கிருஷ்ணன் காற்றில் இறகு போல செல்கிறான்.
மதுசூதனன் சம்பத்

அன்புள்ள மது

உண்மையில் நான் அந்த அத்தியாயங்களுக்கு இடும் தலைப்பு நானே புனைந்துகொள்ளும் மையம். எப்படியோ அதைச்சார்ந்துதான் அந்தக்கதை மையம் கொண்டிருக்கும். அதாவது அந்தத்தலைப்பில் ஒரு தனிச்சிறுகதையாகவும் அது கூடுமானவரை நிலைகொள்ளமுடியும்

ஜெ