Friday, December 29, 2017

தாரையின் வார்த்தைகள்



அன்புள்ள ஜெ,

விகர்ணனின் துணைவி தாரையின் வார்த்தைகள் காந்தாரியை மட்டுமல்ல, வாசகர்களாகிய எங்களையும் தான் அசைத்து விட்டன. மழலை மொழியில் எத்தனை கூரிய கூற்று. சொற்களுக்கு 'கூற்று' எனப் பெயரிட்டவனை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை. 

மழைப்பாடலில், தன் தம்பியின் கனவுகளைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறிய வசுமதி, விழியிழந்த தன் கணவனின் உள்ளத்தோடு ஒத்திசைந்த தருணத்தில் கேட்ட தமிழ்ப் பண்ணால், தன் விழிகளை மூடிக் கொண்ட பின் காணாமல் போகிறாள். அப்படி சென்று விட முடியுமா என்ன? அவள் தான் சகுனியின் உருவில் கலந்து விட்டிருந்தாளே!! அதைத் தான் இன்று தாரை போட்டு உடைத்து விட்டாள். 

பன்னிரு படைக்களத்தில் விகர்ணனிடம் வந்த அற உணர்வின் ஊற்று எது என இன்று கண்டு கொண்டேன்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்