Wednesday, December 9, 2020

ஊழ்

 




அன்பு ஜெயமோகன்,


நலமா?

முதற் கனல் இரண்டாம் முறை படித்துக்கொண்டு இருக்கிறேன். அதில் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் வலுவானதாக இருந்தாலும், இந்த முறை (இரண்டாம் முறை) வசிக்கும் போது  தந்தை - பிள்ளைகளின் உறவு  சார்ந்த விஷயங்கள் என்னை முன்னும் பின்னுமாக சிந்திக்க வைக்கின்றன. ஒரு  தந்தையாக காசி மன்னன்  என்ன மாதிரி தவித்து இருப்பான்  - அம்பையை அவனால் ஏற்றுகொள்ள முடியாத அந்த தருணத்தில்... அதே மாதிரி சந்தனு பீஷ்மர் சபதம் எடுக்கும் போது  எவ்வளவு துயருற்று இருப்பான்... அப்பாக்கள் தான் எவ்வளவு துயரம் தங்க வேண்டி இருக்கிறது . இது கூடவே நான் சு. ரா. நினைவின் நதியில் படித்து கொண்டு இருக்கிறேன். இந்த இரண்டு புத்தகங்களும் எனக்கு  ஏனோ என் அப்பாவை நிறைய நினைவு படுத்தி கொண்டே இருந்தது. உங்கள் அறம் தொகுப்பை படிக்கும் போதும் எனக்கு என் அப்பாவின் நினைவு வந்து கொண்டே இருந்தது.  

நான் அறம் சிறுகதை தொகுப்பின் கடைசி பக்கங்களை பெங்களூர் ரயில் பயணத்தில் முடித்தேன். அருகில் இருந்தவர் கேட்டார், சார், படிச்சிடீங்களா; ஆமா, ரெண்டு மூணு முறை படிசிருப்பேன்; எனக்கு கொடுக்கீறீங்களா நான் படிக்கிறேன்; oh , no  problem. அவர் காட்பாடியில் இறங்கும் போது கேட்டார் இத எங்க வாங்கினீங்க சார், நானும் வாங்கணும்; நீங்களே வச்சிக்கிங்க; எவ்வளவு சார் தரணும் உங்களுக்கு; ஒன்னும் வேணா , நீங்க படிச்சிட்டு  யாருக்காவது படிக்கச் கொடுங்க. என் அப்பா இருந்தால் சொல்லி இருப்பார் - இதைத்தான் சொன்னேன், மனசு ஒரு மாதிரி நெகிழ்ந்து இருக்கும் இந்த மாதிரி புத்தகம் படிச்சா - 

இதையெல்லாம் யோசிக்கும் பொது, என் அப்பா இறக்கும் தருவாயில் (புற்று நோய் ), அவர் என்னிடம் கேட்டது ஒரு அறம்  பற்றிய கேள்வி - நான் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன், கடன் இல்ல, பிள்ளைகள் தொல்லை இல்ல (நான் ஒரே  பிள்ளை), என்னோட விவசாய தொழிலாளிங்கள நல்லா நடத்தினேன் யாருக்கும் வம்பு பண்ணினது இல்ல, ஆனா எனக்கு ஏன் இந்த நோய் ? நல்லா நியாயமா வாழ்வதினால் என்ன பயன்... நான் யார் யாரிடம் எல்லாம் இந்த கேள்வியை  கேட்டேன். ஒரு பதில் இல்ல... அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்க படும்  - இன்னு மட்டும்தான் வள்ளுவர் சொல்றார். அவரும் ஒரு காரணம் சொல்லல. ..இத என்ன ஊழ்  அப்படின்னு புரிஞ்சிக்கறதா? அததான் நிறைய விதத்துல எனக்கு முதற் கனல் சொல்ற மாதிரி புரியுது ... அந்த புரிதல் சரியா சார்?

மிக்க அன்புடன்,

தேவா 

அன்புள்ள தேவா

ஒருவகையில் சரிதான்.

வாழ்க்கையில் நாம் நம்மைவைத்தே எல்லாவற்றையும் யோசிக்கிறோம். பிரபஞ்சம், ஊழ் எதைப்பற்றியும் நாம் யோசிப்பதில்லை. நாமும் பிரபஞ்சமும், நமது ஊழ் என்றே யோசிக்கிறோம். அது மானுட இயல்பு. ஆனால் அறிவு என்பதும் ஞானம் என்பதும் தன்னை விலக்கி, ஒட்டுமொத்த உண்மையை அறிவது. ஒட்டுமொத்தமாக இந்த பிரபஞ்சம் என்ன, இதன் செயல்பாடுகளிலுள்ள ஒழுங்கு என்ன, எதை நாம் அறியமுடியும் எதை நாம் அறியமுடியாது என உணர்வது. முதற்கனல் அதைநோக்கிய வாசல்

ஜெ

வெண்முரசு வாசிப்பு

 


பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.ஜெயமோகன் ஸார் அவர்களுக்கு சென்னையிருந்து கணேசலிங்கம் அன்புடன் எழுதுகிறேன்.

தங்களது மகாபாரதக் காவியமான...வெண்முரசின் ஜந்தாம் பாகம் "பிரயாகை" புத்தகத்தை பல நாட்களாக ரசித்துச் சுவைத்துப் படித்து...இன்று மாலை தான் முடித்தேன்.ஏற்கனவே தங்களின் அற்புதமான எழுத்து நடையில் படித்த நான்கு பகுதிகளைப் போலவே...பிரயாகையும் பிரமாண்டமாகவே இருந்ததென்பதை..பாராட்டுகளுடன் தெரியப்படுத்துவது கடமை என்றே கருதுகிறேன்.

மகாபாரதக் கதையை...சிறுவயதிலிருந்தே அப்பா வாயிலாக, திரு.இராஜாஜி அவர்களின் வியாசவிருந்து...புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவுகள், மற்றும் அனேக டிவி சீரியல்களிலும் கேட்டு, பார்த்து ரசித்து இருந்தாலும்....தங்களுடைய எழுத்துநடையும், கதாபாத்திரங்களையும், நிகழ்வுகளையும் விவரிக்கும் விதமும்..மாபெரும் இதிகாச காவியத்தை அந்தக்கால கட்டத்தில் வாழ்ந்த மக்களோடு இணைந்து நேரில் கண்டு களித்த பேருவகை நெஞ்சில் எழுகிறது.

 

எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீவினாயகப் பெருமான், மகா ஸ்ரீசரஸ்வதி தேவி,ஸ்ரீவேத வியாசர் அனைத்து தெய்வங்களின் நல்லாசிகளையும் தாங்கள் அருளப் பெருவீர்களாக!!

 

அனேக வணக்கங்களுடன்

தங்கள் அன்பு வாசகன்

 

செ.கணேசலிங்கம்

Tuesday, December 8, 2020

திசைதேவர்

 


போர்

 


அன்புநிறை ஜெ,


நலமாக இருக்கிறீர்களா? தங்கள் அமெரிக்க பயணம் குறித்து இன்றுதான் வாசித்தேன். விரல் இன்னும் குணமாகாது கட்டுப்போட்டிருப்பது கவலையளித்தது. வலி குறைந்திருக்கிறதா?

இன்றுதானே ராலேயில் நூலகத்தில் சந்திப்பு எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். என் தம்பி பிரசன்னா அங்கிருக்கிறார்,  இன்றைய நிகழ்ச்சி குறித்து  கூறியிருக்கிறேன். 

அடுத்த வெண்முரசு நூல் தொடங்கி விட்டீர்களா?

உண்மையில் போர் உச்சம் பெற்றது முதலே மனது ஓய்ந்து போயிருந்தது. கர்ணன், தொடர்ந்து துரியன் என இரு நாவல்களும் சேர்ந்து கனத்துப் போயிருந்தது மனது.

வெண்முரசு இவ்வாழ்வுக்கு அளித்திருப்பது ஒன்றிரண்டு அல்ல. முன்பு குருகுலத்தில் குரு அவரவர் தன்மைக்கேற்ப ஏதாவது ஒரு நூலை தியான நூலாக அறிவுறுத்துவது வழக்கம் எனக் குறளுறையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதுபோலத்தான் வெண்முரசை இவ்வாழ்வுக்கான எனது தியான நூல் என எண்ணிக்கொள்வேன். 

எத்தனை எத்தனையோ தருணங்கள், அருகிருந்து வாழ்வைப் பார்த்துக் கொண்டிருப்பது போல அன்றைய நாளை, அப்போதைய எனது மன அவசங்களைத் திறப்பதற்கான ஒளியோடு எப்படி எழுதப்படுகிறது என ஆரம்பத்தில் வியந்து போனதுண்டு. எதுவுமே தற்செயலல்ல என ஆழமாக நம்புவதால், இது எப்படியோ வாழ்வின் இத்தருணத்தில் இந்த நூல், குறிப்பாக அந்தந்தப் பகுதி வாசிக்கும் வரம் அமைந்திருக்கிறது என நிறைவு கொள்வேன். (சொல்வளர்காட்டின் மெய்மைதேடும் குருநிலைகளைக் குறித்தும், தரிசனங்கள் குறித்தும் படித்தபோதே முதல்முறையாக உங்களை ஆசிரியரென நேரில் காணும் பேறு பெற்றதும் இதில் அடக்கம்) 

அதுவே பேரிலக்கியங்களின் காவியங்களின் ஒளி எனப் புரிந்து கொள்கிறேன். ஒவ்வொருவரைப் பற்றியும் பெயர் வரை அறிந்தது போன்ற கருணையும், அனைவரையும் அனைத்து நிலைகளையும் வேறுபாடற்ற கண்ணோட்டத்தோடு கூடிய இரக்கமற்ற விலக்கமுமாக வரும் கருநிற யாதவனே வெண்முரசு என்று படுகிறது. அடுத்த நூலுக்காகக் காத்திருக்கிறேன்.

மிக்க அன்புடன்,
சுபா

சொல்வளர்காடு


 


அன்புள்ள ஜெமோ


இரண்டு வருடங்களாக எனது காலை பொழுது காப்பியுடனும், உங்கள் வெண்முரசுடனுவே தொடங்குகின்றது. ஒரு பகுதி முடிந்து அடுத்து தொடங்கும்  இடைப்பட்ட நாட்களில் மறுபடியும் பழைய வெண்முரசின் பக்கங்களையே படிக்கின்றேன்.

சொல்வளர்காடு படித்தாலும், சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கான உளநிலை இப்போது இல்லை என்றே சொல்ல வேண்டும். வெய்யோன் படித்து விட்டு, மனம் பேதலித்து அலைந்த நாட்கள் உண்டு.

ஆனால், என்றும் படிப்பது நீலமும், இந்திரநீலமுமே. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை, தடுமாற்றங்களை நீலத்தைப் பற்றி கொண்டே கடக்கின்றேன். சமீபத்தில் கடுமையான உளசிக்கல் ஏற்பட்ட போது, நீலம் படித்தும் கலக்கம் தீரவில்லை. இந்திரநீலம் படித்க தொடங்கிய போது, எங்கேயோ திருஷ்டத்யுமனாக என்னை உருவகித்து கொண்டேன். இந்திரநீலம் படித்து முடிக்கும் போது அவனது மனநிலையிலே நான் இருந்தேன். நீலனான அவனிருக்கிறான் என்னுடன் என்ற தெளிவுடன், அவனையன்றி யாருமில்லை என்ற உண்மையையும் உணர்ந்தேன்.

இப்படிபட்ட ஒரு படைப்பை தந்த உங்களை பாராட்ட எனக்கு தகுதியில்லை, என்பதால் வணங்குகிறேன்.

நன்றி
ராதா  

அகழ்வு

 


ஆசிரியருக்கு,


 இன்றைய கோயிலை அகழ்வு செய்து முடித்த பின்னர் தான் திடீரெனத் தோன்றியது சில நாட்களுக்கு முன்பு கனகர் குதிரையில் இலக்கில்லாமல் சென்று கொண்டே இருந்து, பரத்தையர் தெருவுக்கு சென்று பின்னர் மீண்டது. தன்னை உள்ளுணர்வுக்கு ஒப்படைத்துவிட்டு அவர் அறியாமல் செய்த பயணம் அது.

காந்தாரி  தீர்க்கசியாமரை  தொட்டது பின்பு கண்ணிழந்த யானையை உணர்ந்து அதன் வழி சென்றது எல்லாமே உள்ளுணர்வு ஒன்று இன்னொன்றைப்  தட்டி தூண்டி எழுப்பி அதை தொடரும் அனுபவம். மிக அபாரமான அனுபவம்.

கிருஷ்ணன்