Friday, April 13, 2018

மாறிலி




அன்புள்ள ஜெ,

இமைக்கணம் இதுவரை வந்த வெண்முரசுநாவல்களிலேயே சவாலானது. அதன் உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் இணைத்துக்கொள்வது எளிதாக இல்லை. ஏனென்றால் உணர்ச்சிகளனைத்தும் பொய் என்று முன்னரே சொல்லப்பட்டுவிடுகிறது. அந்த மாயநாடகத்தில் மாய உணர்ச்சிகள் வெளிப்படுவது ஒரு மயக்கத்தை அளிக்கிறது. அந்த உணர்ச்சிகளின் உள்ள்டக்கமான தத்துவம் வேறுவகையானது. அது இதில் உணர்ச்சிகரமாக ஈடுபடாமல் வேறெங்கோ நின்று ஒலிக்கிரது. அதை வாசித்துக்கொண்டுவந்து இந்த உணர்ச்சிகளுடன் கலந்து பார்த்தாலொழிய எதையும் புரிந்துகொள்ல முடியவில்லை.

ஆனால் ஒவ்வொருநாளும் ஒருமணிநேரம் இந்தப்பகுதியை திரும்பத்திரும்ப வாசிக்கிரேன். ஒரு சின்ன அனுபவம் என்னவென்றால் இதை அன்றாட வாழ்க்கையுடன் ஒப்பிட்டு எவருடனாவது பேசினால் ஆமாம் இல்லை என்று தெளிவாகச் சொல்லிவிடும் அளவுக்கு புரியத் தொடங்கிவிடுகிறது.

உதாரணமாக எங்கெல்லாம் மாறிலியென ஒன்றை உணர்கிறோமோ அங்கெல்லாம் அதையே தொட்டறிகிறோம் என்ற வரி.  எண்ணிப்பார்த்தபோது நாம் கடவுள் என்று தேடுவதே நிலையற்ற வாழ்க்கையில் நிலையாக ஒன்று இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். நிலையற்ற உலக அலையில் நிலையாக எதை உணர்ந்தாலும் அதெல்லாமே கடவுள்தான். என் அம்மாவிடம் ஃபோன் செய்து அதைச் சொன்னேன். அவர்களுக்கு 87 வயது. ஆமாம் இப்படிச் சொல்ல முடியவில்லை. ஆனால் என் வாழ்க்கை முழுக்க இதைமாதிரி உணர்ந்திருக்கிறேன் என்று சொன்னார்கள்.

அன்றாடத்தின் மாறிலியே ஒழுக்கம். ஒழுக்கத்தின் மாறிலி அறம். அறத்தின் மாறிலி புடவிப்பெருநெறி. அதன் மாறிலி ஒன்றுண்டு. அதுவே அனைத்தும். ஒவ்வொன்றிலும் உட்பொருளென்று நின்றிருப்பது அது.- என்று அடுத்தகட்ட வரிக்கு இயல்பாகச் சென்று சேரமுடிந்தது. ஒழுக்கம் மாறாமலிருக்கவேண்டும். அதற்கு அடியில் அறம் மாறாமலிருக்கவேண்டும். அதற்கு அப்பால் விதியும் அதற்கு அப்பால் பிரம்மமும் மாறாமலிருக்கவேண்டும்

காண்டாக்ட் நாவலில் பை என்னும் எண் இந்தப்பிரபஞ்சத்தில் ஒரு கான்ஸ்டண்ட் ஆகவே அதுவே கிட்டத்தட்ட கடவுள் என கார்ல் சகன் எழுதியிருப்பார்.

எஸ்.மணிகண்டன்